கனடா பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜொனாதன் வான்ஸை மாற்ற லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் ஜெனரல் வான்ஸைப் போன்ற ஒருவர் கனேடிய ஆயுதப் படைகளுக்கு தலைமை தாங்குவது கனடாவின் அதிஷ்டம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டீபன் ஹார்ப்பர் பிரதமராக இருந்தபோது ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் கனடா ஆயுதப்படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக அவர் இந்தப் பதவியில் உள்ளார்.
இந்நிலையில் வான்ஸை மாற்ற லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
வான்ஸின் பதவிக் காலத்தில் கனேடிய ஆயுதப்படைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஈராக், மாலி மற்றும் லாட்வியாவிற்கு கனேடிய படைகளை அனுப்பியமை, பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை கனேடிய ஆயுதப் படைகளில் அதிகரிக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு அவர் வலுச் சேர்த்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
ஆயினும், 2017 ஆம் ஆண்டில் மார்க் நார்மனை இடைநீக்கம் செய்ய அவர் எடுத்த முடிவு மற்றும் இப்போது ஓய்வுபெற்ற துணை அட்மிரலை மாற்றுவதற்கு அவர் கையாண்ட நடவடிக்கை குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வான்ஸ் மாற்றப்படுவாரா? இல்லையா? என்ற முடிவு பிரதமரின் கைகளில் இருக்கிறது. அது குறித்து நான் கருத்து வெளியிட முடியாது. எனினும் கனேடிய ஆயுதப் படைகளின் தலைவராக வான்ஸ் இருப்பது கனடாவின் அதிஷ்டம் என பாதுகாப்பு அமைச்சர் சஜ்ஜன் தி கனடியன் பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.